சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 30 ஆயிரம் கி.மீ. சைக்கிளில் பயணம்
தஞ்சாவூர்: சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்யும் வணிகர் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தார்.
மேற்குவங்க மாநிலம், பலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதாய் பால். வணிகரான இவர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களிடம் வலியுறுத்துவதற்காக மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.
பல மாநிலங்களுக்குச் சென்ற இவர் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தார். இவரை காவல்துறையினர் வரவேற்று பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
மதாய் பால்
இதுகுறித்து மதாய் பால் தெரிவித்தது: சாலை விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்து வலியுறுத்துகிறேன்.
கடந்த 70 நாள்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளேன். மொத்தமாக ஒன்றரை ஆண்டில் 30,000 கி.மீ. பயணம் செய்ய உள்ளேன்.
இப்பயணத்துக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உணவு, நிதியுதவி அளித்து வருகின்றனர் என்றார் மதாய் பால்.