விவசாய பாசனத்துக்காக வீடுர் அணை மதகுகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் வீடுர் அணைக்கு, வராகநதி, தொண்டியாறு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீர் வந்து சேருகிறது. அணையில் சேரும் இந்த நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டு வராகநதியாக(சங்கராபரணி) விக்கிரவாண்டி அருகே வீடுர், பத்துக்கண்ணு, வில்லியனூர் வழியாக புதுச்சேரி அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
வடகிழக்குப் பருவ மழை காலங்களில் அணை நிரம்பி, தேக்கப்படும் நீரானது விவசாய நிலங்கள் பாசனத்திற்காக ஆண்டு தோறும் ஜனவரியில் நீர் திறந்து விடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கண்டமங்கலம் வட்டாரம் மற்றும் புதுவை பகுதியிலிருந்து 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயனடைகின்றது. நிகழாண்டு கடந்த மாதத்தில் இருந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் வீடுர் அணை தொடர்ந்து அதன் முழு(32 அடி) கொள்ளவு நிரம்பி உள்ளது.
வீடுர் அணையின் நீர் தேக்கத்தால் பாசன வசதி பெரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பாசனத்திற்காக மதகுகளை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த பாசன நீர் தொடர்ந்து மே மாதம் வரை 135 நாள்களுக்கு தேவைக்கேற்றபடி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.