பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற திமுக மாநில மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனா்.
இவா்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினர் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக நடத்தும் போராட்டத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி.யை காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கற்பகம் கல்லூரி அருகே காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.