கோவை: கோவையில் புதன்கிழமை ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட பட்டியலில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி இறுதி வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின் நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள், இணையதளம் மூலம் விண்ணப்பித்த 1 லட்சத்து 27 ஆயிரத்து 562 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தவிர 35 ஆயிரத்து 551 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதிதாக வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண் வாக்காளர்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல் வாக்காளர் 37 ஆயிரத்து 667 பேர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
இதில் கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மு.கருணாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், தி.மு.க, அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.