அவிநாசி: அவிநாசி அருகே ஆயிக்கவுண்டம்பாளையதில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, ஆயிக்கவுண்டம் பாளையம், செந்தில் நகர் புஷ்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். இதையறிந்த பொதுமக்கள், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிக்கவுண்டம்பாளையம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீஸார், வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களின் கோரிக்கைகள், உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.