சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் (ஐடிஐ) வெல்டிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் கல்வி வகுப்புகளை தொடங்கக் கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம், 16 மாவட்டங்களில் கூட்டுறவு பட்டய பயிற்சியும், 9 மாவட்டங்களில் தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்கள் ( ஐடிஐ) மூலம், தையல், கணினி, எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஐடிஐ கல்வி நிறுவனங்களில், பிட்டர், வெல்டர், மோட்டார் வாகன பழுது நீக்கம், ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடிவு செய்து, 5 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த தொழில் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடிவு செய்து, முதலீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வகுப்புகள் தொடங்கவில்லை என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தொழிற் பயிற்சி வகுப்புகள் தொடங்காததால் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வகுப்புகளைத் தொடங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.