தாராபுரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் சங்கரிடம் புதன்கிழமை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம்- கொளிஞ்சிவாடி 10 - ஆவது வார்டில் உள்ள இரண்டு கழிப்பிடங்கள் சேதம் அடைந்து பல வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் அடர்ந்த முட்காடுகளுக்குள் சென்று இயற்கை உபாதையை கழிக்கும் சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது பெரிய, பெரிய விஷ பாம்புகளும் வெறி நாய்களும் மற்றும் பல விஷ பூச்சிகளும் முட்புதர்களில் இருப்பதால் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையில் தினம் தினம் இருந்து வருகிறார்கள். எனவே, உடனடியாக இரண்டு கழிப்பிடங்களையும் செயல்படும் வகையில் சரிசெய்து தர வேண்டும்.
மேலும், பழைய ஆற்று பாலம் கீழே இரண்டு புறமும் உள்ள கொளிஞ்சிவாடி மயானம் வரை ஆற்றோரம் உள்ள செடிகளை அடியோடு வெட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்து பொது மக்களை விஷ பாம்பு களிடமிருந்தும், வெறிநாய் கடிகளிலிருந்தும் காப்பற்று மாறும், அதேபோல் பழைய ஆற்றுப்பாலத்தின் இருபுறங்களும் முள்மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றது. அதனையும் வெட்டி சுத்தம் செய்து தர வேண்டும்.
பழைய ஆற்றுப்பாலம் மேற்கில் இரு புறமும் ஈஸ்வரன் கோவில் பாலம் மேற்கிலும், கிழக்கில் ஆற்றோர வளைவில் கோழிக் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டி வருவோரால், துர்நாற்றம் வீசி மக்களுக்கு தொற்று நோய் உருவாகும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும்.
மேலும் கொளிஞ்சிவாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் புழுக்கள் இருந்து வருகிறது. பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்துள்ளதால் உடனடியாக சுத்தம் செய்து சரிசெய்து தருமாறும் இதேபோல், மீனாட்சிபுரம் குமரன்மஹால் செல்லும் வழிக்கு முன்பாக உள்ள போர்வெல் பழுதாகி, அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வராமலும், ஒருசில இடங்களில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகள் உடைந்தும் நல்ல தண்ணீர் வரக்கூடிய பைப் லைன்கள் அடைத்தும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் மீனாட்சிபுரத்தில் உள்ள கழிப்பிட கதவுகள் அனைத்தும் உடைந்து அட்டைகளை வைத்து மறைத்து பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் பயன் பெறும் மேற்கூறிய கோரிக்கைகளை உடனடியாக அவசரகால நடவடிக்கையாக எடுத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு நகராட்சி ஆணையாளர் சங்கரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு கொடுக்கும் போராட்டத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஆற்றலரசு மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் நகர செயலாளர் செந்தில்குமார் நகர துணை செயலாளர் உதயகுமார் நகர பொருளாளர் கரிகாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.