கரோனா குறித்த பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் அறநிலையத் துறையின் கீழ் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தகவல் பரவியது குறித்து பதிலளித்த அமைச்சர், கரோனா குறித்த பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் நடக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.