நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப் பதிவு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அப்போது, 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப் பதிவு கொண்ட வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வனத் துறை மூலம் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்திருந்தார்.
மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களைச் சந்தித்து, விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுது ஆட்சியர்.
அதன்படி, தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், மீன்வளக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை நாகையில் படகில் பயணித்தனர்.
அவர்கள், நாகை புதிய கடற்கரையிலிருந்து 5 படகுகளில் விழிப்புணர்வு பதாகைகளுடன் பயணித்து, நாகை துறைமுகத்தில் கரையேறினர்.
அங்கு மீன் விற்பனை மற்றும் கொள்முதலில் பங்கேற்றிருந்த மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களைச் சந்தித்து, விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும், மாணவர்களும் வலியுறுத்தினர்.