சேலம்: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பிரசாரம் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை சேலம் வந்தார். பின்னர் அவர் ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட வாழப்பாடியில் வேட்பாளர் சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதன் பின்னர் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் நல்லதம்பிக்கு தம்மம்பட்டி பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார்.
இதன்நபின்னர் ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆத்தூரில் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.
சனிக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 8 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணி குறித்தும் , பிரசாரம் செய்வது குறித்தும் விளக்கமாக முதல்வர் எடுத்துரைத்தார்.
பின்னர் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனித்தனியாக தேர்தல் பிரசாரம் குறித்து முதல்வர் பழனிசாமி பேசினார்.