தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி புரியும் பெண்கள் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வடிவில் ரங்கோலி கோலம் போட்டு அதில் அனைவரும் வாக்களிப்போம், கரோனா அச்சுறுத்தல் உள்ளதால் சமூக இடைவெளி விட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் ரங்கோலி கோலத்தில் இடம் பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து ரங்கோலி கோலம் போட்டு முடித்த பெண்கள் சத்தியமங்கலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.