அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் சற்று முன் மாரடைப்பால் காலமானார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ. முகமது ஜான் கடந்த ஒரு வார காலமாக, ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம். குமாரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தவர் நண்பகல் மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து பிரசாரத்திற்காக அவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது லேசாக நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக அவர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டுள்ளனர்.