தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முழு ஊரடங்கு: ஒத்துழைப்பு கோரி முதல்வர் ஸ்டாலின் தொழில்வணிக அமைப்பினருடன் கலந்தாலோசனை

கரோனா பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று, தலைமைச் செயலகத்தில் தொழில் மற்றும் வணிகச் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

News image
Updated On :9 மே 2021, 2:40 pm

DIN

கரோனா பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று, தலைமைச் செயலகத்தில் தொழில் மற்றும் வணிகச் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர், அரசு உயர் அலுவலர்கள், தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில், கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிர்களைப் பேணிக் காத்திடவும், பெருந்தொற்றின் தொடர் பரவல் சங்கிலியை முறித்திடவும், அரசு எடுத்துவரும் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். தனது தொடக்க உரையிலேயே, இந்தக் கூட்டத்தை ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். 
பதவியேற்ற குறுகியகாலத்தில், அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகியதால் உங்களை அழைத்துப் பேசி அறிவிக்க முடியவில்லை என்றாலும், வரும் காலங்களில் நிச்சயம் உங்களை கலந்தாலோசித்த பிறகு, அறிவிக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என்றும், இதற்கு தொழில் மற்றும் வர்த்தக சங்கங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொழில் மற்றும் வர்த்தகச் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளைப் பாராட்டி, முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்தன. தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாப்பதே, அரசின் தலையாய குறிக்கோள் என்றும், இந்தப் பெருந்தொற்றின் தொடர் பரவல் சங்கிலியை முறித்து, இந்தத் தொற்றின் பாதிப்பினை வெகுவாக குறைத்திட வேண்டும் என்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். விலக்களிக்கப்பட்ட தொழிற் சாலைகளும், வர்த்தக அமைப்புகளும், அனைத்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில், தொழில் மற்றும் வணிக அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என முதல்வர் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறைஅமைச்சர் தா.மோ. அன்பரசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.