தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில், பதுக்கி வைக்கப்பட்ட, டாஸ்மாக் மது பாட்டில்கள் குவாட்டர் ரூ.300-க்கு சட்டவிரோதமாக விற்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா 2 -ஆவது அலையை கட்டுப்படுத்த, தமிழக அரசு, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசு டாஸ்மாக் கடைகள் 24ம் தேதி வரை செயல்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது,
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல்,வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பதுக்கல் செய்த டாஸ்மாக் மது பாட்டில்கள், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரிக்கரையில் அதிகாலை முதலே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு, ஒரு குவாட்டர் 300 ரூபாய் வீதம் விற்பனை செய்யும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தம்மம்பட்டி போலீசார், சில நாட்களுக்கு முன், தம்மம்பட்டி 7 -ஆவது வார்டில், ஒரு வீட்டில் சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் அதிரடியாக செயல்பட்ட போதும், பதுக்கல்காரர்கள், தங்களது ரகசிய நெட்ஒர்க் மூலம், டாஸ்மாக் மதுவை சட்டவிரோதமாக விற்று வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய்க்கான டாஸ்மாக் மதுபாட்டில்கள், தம்மம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், தம்மம்பட்டி போலீசார் அதிரடி காட்டி, சட்டவிரோதமாக விற்கப்படும், டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.