ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் 1800 ஏக்கர் நிலங்களை சேட்டிலைட் கருவி மூலம் அளக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் 1800 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கோயில் ஆவணங்களில் உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களின் குத்தகை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவியின் மூலமாக அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான மற்றும் சுற்றியுள்ள நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் அதிகாரிகள் அதனை அளவீடு செய்தபோது கோயிலை ஒட்டியுள்ள திருப்பாற்கடல் குளம் மட்டும் 9.7 ஏக்கர் என்பது தெரியவந்தது. ஆனால், தற்போது குளம் சில ஏக்கர்கள் குறைந்து 2 ஏக்கரில் உள்ளதாக தெரியவருகிறது. மற்ற இடங்கள் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் நிலங்களாக மாறியுள்ளன.
இதுபற்றி கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது: அளவீடு செய்யும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. முழுமையாக பணி இன்னும் நிறைவடையவில்லை. பணி நிறைவடைந்து ஆய்வுக்கு பின்னர் தான் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் எவ்வளவு உள்ளது, கோயில் குளம் எத்தனை ஏக்கர் உள்ளது என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.