கம்பம்: தேனி மாவட்டம் அருகே இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் படகு சவாரி தொடங்கியதை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய வளைவு அணையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்ததால், இடுக்கி அணையில் நீர்மட்டம் நிறைந்து பருவகால நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடத்தும் வனத்துறையினர் படகு சவாரியை தொடங்கி உள்ளனர்.
ஒரு நபருக்கு ரூ.145-ம், சிறுவர்களுக்கு ரூ.85-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வெள்ளப்பாறை படகுத் துறையிலிருந்து புறப்பட்டு இடுக்கி அணை செறுதோணி அணை பகுதிகளை சுற்றிக் காண்பித்து பின்பு மறுபடியும் படகுத்துறைக்கு 30 நிமிடத்தில் கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
காலையில் 9 மணிக்குத் தொடங்கும் படகு சவாரி பயணிகளின் வருகையை பொருத்து தொடர்கிறது. ஒரு படகில் 20 பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்திற்குப் பின்பு கேரள அரசு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன் பேரில் இடுக்கி அணையில் படகு சவாரிக்கு கட்டணக் குறைப்பு மற்றும் படகுகள் இயக்கம் அறிவித்ததால் சுற்றுலாப் பயணிகள் இடுக்கி அணைக்கு குவிந்து வருகின்றனர்.