கும்மிடிப்பூண்டி: ஏனாதி மேல்பாக்கம் துணை தலைவர் பதவியை சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2, 5 ஆகிய இரு வார்டுகளுக்கு நடந்து முடிந்த இடை தேர்தலில், 2 ஆவது வார்டில் ஜி.பரமசிவமும், 5 ஆவது வார்டில் என்.தேவராஜும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் இருந்து 4 ஆவது வார்டு உறுப்பினர் கே.சம்பத் ,பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் இருந்து 3 ஆவது வார்டு உறுப்பினர் இ.பாலா என இருவர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் தலா 3 வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் இ.பிரபு செலுத்தும் வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்கும் சூழல் எழுந்தது.
அப்போது நிகழ்விடம் வந்த சோழியம்பாக்கம் கிராம மக்கள் தலைவர், துணை தலைவர் என இருவரும் சோழியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் இருக்க கூடாது. ஊராட்சி தலைவர் தனது வாக்கை ஏனாதிமேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.