முல்லைப் பெரியாறு அணை மற்றும் மழை வெள்ள பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
"மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்" என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | முல்லைப் பெரியாறு அணை: கேரள வதந்திகளுக்கு தமிழக அரசு பதில்
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 137 அடியாகப் பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் தற்போதைய நிலையில் நீரைத் தேக்கி வைக்கும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் அவசர பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வலியுறுத்தியது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரளத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.