சென்னை: பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுடன், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அப்போது தமிழகத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அதே வேளையில், கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். செங்கல்பட்டில் எச்எல்எல் பயோடெக் மற்றும் குன்னூரில் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டை உடனடியாகத் திறக்க அனுமதிக்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி என 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.