மதுரை: பத்திரப்பதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவரப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவு துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.
அடுத்த ஆறு மாதத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.
பத்திரப் பதிவில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மசோதா கொண்டுவரப்படும்.
முறைகேட்டில் தொடர்புடையை பிற துறையை சேர்ந்தவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.