தமிழில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெறுவோருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி" என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூலில் குறிப்பிட்டிருப்பதை வைத்தே உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்ச் சொல்லுக்குத் தனி ஓசையுண்டு; இசையுண்டு; அதில் தனிச்சுவையுண்டு; எண்ணமெல்லாம் ஈர்க்கும் திறனுன்டு; இன்னும் எத்தனையோ சிறப்புகளுண்டு! அதனால்தான், பன்மொழிப் புலவர் பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்பும் வகையில், உலகப் பொது மறையாம் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்தமைக்காக டி.இ.எஸ். ராகவன், ரவீந்திரநாத் தாகூரின் 'கோரா' என்கிற வங்காள மொழி நாவலை தமிழில் மொழி பெயர்த்தமைக்காக முனைவர் கே. செல்லப்பன், கவிஞர் சல்மா அவர்கள் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை என்கிற தமிழ் நாவலை மராத்திய மொழியில் மொழி பெயர்த்த சோனாலி நாவங்குள் ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்கள் மூவருக்கும் எனது பாராட்டுக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.