நாகப்பட்டினம்: நாகை மாவட்டம்,கீழ்வேளூர் வட்டம், தேவூர் அருள்மிகு தேவபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பூமியில் புதையுண்டிருந்த சுவாமி, அம்பாள் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
தேவூர் தேவபுரீஸ்வரர்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுவாமி, அம்பாள் சிலை
தேவூரில் உள்ள அருள்மிகு தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரையில் உள்ள 85-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார்.
தேவபுரீஸ்வரர்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள அம்பாள் சிலை
இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியாள்கள் கோயில் வளாகத்தில் குழி எடுத்தபோது, சுவாமி சிலைகள் மற்றும் பூஜைப்பொருள்கள் பூமியில் புதையுண்டிருந்தது தெரியவந்தது.
தேவபுரீஸ்வரர்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுவாமி சிலை
இதையடுத்து, கீழ்வேளூர் வட்டாட்சியர் எஸ்.மாரிமுத்து முன்னிலையில் பூமியில் புதையுண்டிருந்த 8 சுவாமி சிலைகளும், 12 பூஜைப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேவூர் தேவபுரீஸ்வரர்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள கண்டெடுக்கப்பட்ட சிலைகள்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் அனைத்தும்
ஐம்பொன்னால் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயில் வளாகத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.