வேதாரண்யம்: திமுக பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சாது என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாவின் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தார்.
வேதாரண்யம் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது, திமுகவினர், அவர்களது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறித்து பேசிய ஸ்டாலின்,
எனது மகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது.
திமுக பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. மிசா சட்டத்தையே சந்தித்து சிறை தண்டனை பெற்றுள்ளோம்.
வேதாரண்யத்தில் பிரசாரத்தின் போது அறிமுகம் செய்யப்பட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள்.
முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறி வருகிறார். அவர் விவசாயி இல்லை விஷ வாய்வு. பச்சை துண்டு போட்டு விட்டால் விவசாயி என்று கூற முடியாது.
மீனவர்களுக்கு.ஆதரவான அரசு என்று அதிமுக பிரசாரம் செய்கிறது. இது வாக்குக்கான பிரசாரம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் தொகுதி மாக்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ஆளுர் ஷாநவாஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாக்கு சேகரித்து பேசினார்.