கோவை: வாக்குச்சாவடிகளில் ஆய்விற்கு சென்றபோது தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொண்டமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி மாவட்ட தேர்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் மனு அளித்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தொண்டமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் சிவாலயா பகுதியிலுள்ள வாக்கு சாவடியில் ஆய்விற்கு சென்றபோது அப்பகுதியில் இருந்த அதிமுகவினர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தை பார்த்த காவல் துறையினரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இது தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தவிர இச்சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வாகுச்சவடியில் வாக்குப் பதிவு செய்வதற்கு ஒரு மணி நேரம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.
தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத செல்வபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.