சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்குக்கு மத்தியில் கோயில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதித்தும், உணவகங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகள் தொடர்பான தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,
கரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகப் பார்க்க.. தமிழகத்தில் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்