நாகப்பட்டினம்: கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமெடுத்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக நாகை மாவட்ட காவல்துறை சார்பாக நாகை மாவட்டத்தில் வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் நாகை மீன்பிடி துறைமுகம், பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியிருந்தன. எப்பொழுதும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை சுற்றுலா வாசிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாகூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டிருப்பதுடன், நாகை புதிய பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.