காணாமல் போன 11 குமரி மீனவர்களை தேடும் பணியை இந்திய கடற்படை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 11 மீனவர்கள் பதிவு செய்யப்பட்ட நவீன மீன்பிடி படகு மூலமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகுகள் காணாமல் போனதாக ஏப்ரல் 24 அன்று செய்திகள் வந்துள்ளன.
மேலும், காணாமல் போன தேங்காய்ப்பட்டினத்தை சேர்ந்த ஜோசப் பிராங்க்ளின் உள்ளிட்ட 11 மீனவர்களை உடனடியாக தேடுவதற்கு கிழக்கு, மேற்கு பகுதியிலுள்ள கடற்படை காவல்துறையினருக்கு தமிழக அரசு ஆணையிட்டு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மூலமும், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியும் தேடுகிற பணியை தீவிரப்படுத்த வேண்டும். மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் காணாமல் போனதால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.