வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆந்திரத்தில் இருந்து கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸார், மினி லாரியும், கடத்தி வந்த இளைஞரையும் ஆந்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் அய்யனார்(25). இவர், ஆந்திரம் மாநிலத்தில் இருந்து, கடந்த மாதம் 25 ஆம் தேதி பொலிரோ பிக்கப் மினி லாரியை கடத்தி வந்து மறைத்து வைத்துக் கொண்டு இப்பகுதியில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக காரிப்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நீர்முள்ளிக்குட்டை கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்திய, காரிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம் தலைமையிலான போலீஸார், மறைத்து வைக்கப்பட்டிருந்த மினி லாரியை பறிமுதல் செய்தனர். ஆந்திரத்தில் லாரியை கடத்தி வந்த இளைஞர் அய்யனாரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஆந்திரம் மாநிலம் நெல்லூர் மாவட்டம் ரேணுகுண்டா போலீஸாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்த காரிப்பட்டி போலீஸார், பறிமுதல் செய்த மினி லாரியும், லாரியை கடத்தி வந்த இளைஞர் அய்யனாரையும் ஆந்திரம் மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திரத்தில் கடத்தப்பட்ட மினி லாரியும், கடத்தி வந்த இளைஞரையும் கண்டு பிடித்து ஒப்படைத்த காரிப்பட்டி போலீஸாருக்கு ஆந்திரம் மாநிலம் ரேணுகுண்டா காவல் நிலைய போலீஸார் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
ஆந்திரத்தில் இருந்து மினி லாரியை கடத்தி வந்த இளைஞர், வாழப்பாடி பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.