தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பதிவேற்றம்: உதவி எண் அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
சென்னை: தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தேர்வாணையத்தால் 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி 1)ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களில், தங்களது இணையவழி விண்ணப்பத்தில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்கள் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் கீழ்க்காணும் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1. நியமனம் - அறிவிக்கை - விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்.
2. படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் - விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் - தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவம்
விண்ணப்பதாரர்கள், இப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, புதிய வடிவத்தில் உள்ள தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 கேபி முதல் 200 கேபி அளவில் ஸ்கோன் செய்து அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படின், தேர்வாணையத்தின் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.