தமிழகத்தில் 11.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று மேற்கு மாம்பலத்தில் உள்ள பொதுநல மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு வாங்கப்பட்ட ஹெபாஃபில்ட்டர் எனும் மருத்துவ உபகரணத்தை மருத்துவமனை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். அமைச்சர் தமது ஒரு மாத ஊதியத்தை இம்மருத்துவமனை வளர்ச்சிக்கு வழங்குவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கருணாநிதியும் தமது ஒரு மாத ஊதியத்தை இம்மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிட்ம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவனந்தபுரம், கொச்சின், குறிப்பாக கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளைக்கு எந்தெந்த ரயில் நிலையங்களில் எவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய இருக்கிறோம். நேற்று முன்தினம் (ஆக.4) 1,56,635 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைக்கு (ஆக.5) 1,58,797 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே ஒரு நாளைக்கு 1.50 லட்சத்திற்கு மேல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுவது தமிழகத்தில்மட்டும்தான். நேற்றைக்கு கரோனாத் தொற்றின் அளவு 1997. ஒரு நாளைக்கு 30, 40 என்கிற அளவில் சராசரியாக உயர்ந்தும், குறையதும் கொண்டிருக்கிறது.
1.2 விழுக்காடு அளவிற்குத்தான் உயர்ந்துகொண்டுள்ளது. முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவில் தொற்று பரவாமல், அதற்கு மேலும் தொற்றின் அளவு விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
இரண்டு தவணை தடுப்பூசிகளுமே செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே கோவாக்சின் முதல் தவணை செலுத்தியவர்கள்தான் இப்போது கொஞ்சம் நிலுவையில் இருப்பார்கள். ஏனென்றால் இப்போது கோவி-ஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் வந்துகொண்டிருக்கின்றன. கோவி-ஷீல்டு தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்தியவர்கள், இரண்டாவது தவணையும் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளில் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,28,01,650. இதுவரை அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,26,01,212. கையிருப்பில் 8,26,560 தடுப்பூசிகள் உள்ளன. இன்று 12 மணிக்கு மத்திய அரசிடமிருந்து 3,30,000 தடுப்பூசிகள் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கையிருப்பில் 11.5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன.
இதையும் படிக்கலாமே | டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று
முதல்வரின் சி.எஸ்.ஆர். நிதியில் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளுக்குப் பிறகு, தனியார் மருத்துவமனைகளில் 20,38,680 தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடமிருந்து வாங்கியிருக்கின்றனர். அதில் 16,34,959 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 4,03,721 தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனை வசம் கையிருப்பில் உள்ளது. இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 72 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக தெரிவித்து, அதற்கும் கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசின் சார்பில் வழங்கியிருக்கின்றனர். தடுப்பூசிகள் செலுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக 5,80,000 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகள் செலுத்துவதில் இந்த மாத இறுதிக்குள் மூன்றரை கோடி தடுப்பூசிகளை கடப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை செலுத்தப்பட்டுள்ள இரண்டரை கோடி தடுப்பூசிகளில் சுமார் 60 லட்சம் பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுதத்தப்பட்டிருக்கும் என்றார்.