கம்பம்: தேக்கடி ஏரியில் படகு சவாரி திங்கள்கிழமை முதல் தொடங்கியது, அனுமதி கட்டணமும் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் தேக்கடி ஏரி, உலக அளவிலான சுற்றுலா மையமான தேக்கடி ஏரியில் சிறப்பு அம்சம் படகுச்சவாரி. இதர சிறப்புகளான மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்டவை, சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும்.
நாள்தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து போகும் இடமாக தேக்கடி ஏரி விளங்கியது.
கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி நடைபெறவில்லை.
சுமார் 100 நாள்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகு சவாரி திங்கள்கிழமை முதல் தொடங்கியது, மொத்தம் 5 டிரிப்புகள் இயக்கப்பட உள்ள நிலையில், காலை 7:00 மணிக்கு முதல் டிரிப்பும், இரண்டாவது டிரிப் 9 மணிக்கு இயக்கப்பட்டது முதல் பயணத்தில் 21 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சுற்றுலாத் துறையினர் அவர்களிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ், இரண்டு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் அனுமதி போன்ற சான்றிதழ்களை ஆய்வு செய்த பின்பு படகு சவாரிக்கு அனுமதி தந்தனர்.
கடந்த ஆண்டு தேக்கடி படகு சவாரிக்கு நுழைவு கட்டணம், ஆனவாச்சல் வாகன நிறுத்தத்திலிருந்து தேக்கடிக்கு செல்ல பேருந்து கட்டணம் மற்றும் படகு சவாரிக்கான கட்டணம் என மொத்தம் ரூபாய் 500 வசூலிக்கப்பட்டது.
தற்போது 200 ரூபாய் குறைக்கப்பட்டு கேரள சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் 300 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டண குறைப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.