சென்னை: உரிய விசாரணைக்குப் பிறகு கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடன் கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். மந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளபடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரபாய் என மதிப்பிடப்பட்டது.
முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக க4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுபோன்ற இதர நகைக்கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர் என்று கூறினார்.