காபூல் வாழ் இந்தியர்களை காக்க மத்திய அரசு  தவறிவிட்டது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

ஆப்கனில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காபூல் வாழ் இந்தியர்களை காக்க மத்திய அரசு  தவறிவிட்டது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
காபூல் வாழ் இந்தியர்களை காக்க மத்திய அரசு  தவறிவிட்டது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கோவை: ஆப்கனில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்  நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த சீதாராம் யெச்சூரி, காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கரோனா மருந்து இருப்பு குறித்து தெளிவான பதிலை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வர் செங்கல்பட்டு, குன்னூர் பகுதிகளில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டுள்ளார். கரோனா 3 ஆவது அலை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 

பெட்ரோலியப் பொருள்களுக்கு அதிகப்படியான வரியை மத்திய அரசு விதிக்கிறது. பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியால்  2020-2021 ஆம் ஆண்டு ரூ3.71 லட்சம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈட்டியுள்ளது. இதுவரை ரூ.15.6 லட்சம் கோடியை வரிவிதிப்புகள் மூலம் மத்திய அரசு ஈட்டியுள்ளது. சிபிஎம் கட்சி தொடர்ந்து பெட்ரோலிய பொருள்களின் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதன் மூலமே அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைக்க முடியும் என்றார்.

இந்தியாவில் உள்ள முக்கியப் பிரமுகர்கள், நீதித்துறை, பத்திரிகையாளர்கள் என பலரும் பெகாசாஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி 20 எதிர்க்கட்சிகள் இணையம் மூலம் பெகாசஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளன.

கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்ற தகவல் மத்திய அரசிடம் இல்லை. காபூலில் உள்ள இந்தியர்களைக் காக்க மத்திய அரசு  தவறிவிட்டது. 
ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினை பயங்கரவாத  நாள் என பாஜக அறிவித்து இருக்கின்றது. 1938 ஆம் ஆண்டு சாவர்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றார். 1940க்கு பின்புதான் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தார். முதலில் பிரிவினைவாத கருத்தினை துவங்கியது சாவர்க்கர்தான். 26 மாநிலங்களில் பாஜக 126 இடங்களில் யாத்திரை நடத்துகிறது. இது கரோனா வேகமாக பரவுவதற்கு வழிவகுக்கும். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுள்காலம் முடிந்த வாகனங்களை அழிக்கும் திட்டம் குஜராத்தில் உள்ள சில முதலாளிகளுக்கு மட்டுமே பயன்தரும் என்றார் அவர். 

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com