'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என பெயர் மாற்றம்: தமிழக அரசாணை வெளியீடு
இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத் திட்டங்களை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
புதிய வீடுகள் கட்டித்தருதல், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என ரூ. 317 கோடிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம், ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.