கிருஷ்ணகிரி: குழந்தை கடத்தல் வழக்கில் இரு பெண்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள லைன் கொள்ளையை சேர்ந்தவர் சத்தியராஜ் (35) தொழிலாளி. கடந்த 6.10.2019 அன்று, இவர் வீட்டில் இருக்கும் பொழுது கோயில் காணிக்கை பெற வந்த இரு பெண்கள், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சத்தியராஜின் 2 வயது ஆண் குழந்தையை புடவையில் மறைத்து கடத்த முயன்றனர்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு இரண்டு பெண்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பர்கூர் அருகே உள்ள சக்கில்நத்தம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு(25), சீதா (30) என தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து இரு பெண்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். விஜயகுமாரி, தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வாசித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட அலமேலு, சீதா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞர் எம்.பாஸ்கர் ஆஜரானார்.