சென்னை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 89வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.
கி. வீரமணியின் இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்வின் போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் வீரமணியின் துணைவியார் வீ. மோகனாம்மாள் ஆகியோர் உள்ளனர்.
முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.
11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.