ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ரோசய்யா மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை காலை காலமானார்.
ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். மேலும், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராகவும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
அவரது மறைவுக்கு ஆளுநர் கே.என். ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரோசய்யா மறைவு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் இருவரும் முதல்வராக இருந்தபோதும், பின்னர் அவர் தமிழக ஆளுநராக இருந்தபோதும் அவருடன் பேசியதை நான் நினைவு கூர்கிறேன். மக்கள் நலனுக்கான அவரது பணிகள் என்றும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.