ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் நாளை நடராஜர் கோயில் தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.19) தேரோட்டமும், திங்கள்கிழமை (டிச.20) ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என கோயில் பொது தீட்சிதா்கள் அறிவித்தனா்.
இந்த நிலையில், சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கரோனா பொது முடக்கம் காரணமாக தேரோட்டத்துக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது. மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவை பக்தா்களுக்கு அனுமதியின்றி நடத்தவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், சனிக்கிழமை கோயிலின் 5 தோ்களும் அலங்கரிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டன. இதனிடையே நடராஜா் கோயில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்க வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் நாளை நடராஜர் கோயில் தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி அளித்துள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடராஜர் கோயில் தேரோட்டத்தை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.