அரக்கோணம் அருகே, திரைப்படம் பாணியில் துப்பாக்கியால் சுட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே செய்யூர் கிராமத்தில் வசித்து வரும் புஷ்கரன், அவரது தாய், பெரியம்மா, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். வீட்டின் கதவை திறக்காமல் யார் என கேட்ட நிலையில், மர்ம நபர்களில் ஒருவர் கதவு வழியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் வீட்டில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன பொருள்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.
திரைப்படம் பாணியில் நள்ளிரவில் நடந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!