சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அப்போது கழுதைப்புலிகள் கால் தடத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட பெரிய வனப்பகுதியை உள்ளடக்கியதாகும். இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
கழுதைப்புலிகள் கால் தடத்தை வட்டமிட்டு காட்டும் வனத்துறையினர்.
இதையும் படிக்க | சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்: நாளை ஆருத்ரா தரிசனம்
இந்நிலையில், மழைக் காலத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்று தொடங்கியது. 350க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வியூ பைண்டர், காம்பஸ், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட அதிநவீன கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணிக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எக்காலஜிக்கல் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கழுதைப்புலிகள் கால் தடம்
வனப்பகுதியில் வசிக்கும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் உள்ளிட்ட விலங்குகளின் எச்சங்கள், கால்தடம் மற்றும் நீர் நிலைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து ஆறு நாட்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுப்பு விபரங்களை சென்னை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று பவானிசாகர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியின் போது அரிய வகை வன விலங்கான கழுதைப் புலியின் கால் தடம் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.