கம்பம்: தேனிமாவட்டம், கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை பயன்பாடற்ற பள்ளி வகுப்பு கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கியது.
திருநெல்வேலியில் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டடங்களை இடிக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன் எதிரொலியாக தேனி மாவட்டம், கீழக்கூடலூரில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயன்பாடற்ற வகுப்பு கட்டடங்கள் இருந்தன. அவற்றை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் பார்வையிட்டு இடித்து அகற்ற உத்தரவிட்டார். அதன் பேரில் கட்டடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.
இதை பார்வையிட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் கூறுகையில், முதல்வர் ஆலோசனைப்படி பழுதடைந்த பள்ளி கட்டங்களை, ஞாயிற்றுக்கிழமை முதல் அகற்றும் பணிகளை தொடங்கியுள்ளோம், தேனி மாவட்டத்தில் 96 அரசு பள்ளி கட்டங்கள் பழுதடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளி கட்டங்களையும் கண்டறிந்து இடித்து அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதையுடம் படிக்க | சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்: நாளை ஆருத்ரா தரிசனம்