ஜனநாயகத்தை வலுப்படுத்த பிரதநிதித்துவ முறை வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)
கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)

பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற நிலையை மாற்றி, ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமை, நாடாளுமன்ற வளாகத்திலேயே மத்திய பாஜக அரசால் பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக பாதுகாப்பு இந்தியாவில் மட்டுமே இருப்பதாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திரமோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை.

தேர்தல் சீர்திருத்தம் என்பது முறையாக நடைபெற வேண்டும். பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், வெற்றி பெற முடியும் என்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த நிலையை மாற்றுவதற்கு, வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு சாதமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள மத்திய அரசு, அந்த நிறுவனங்களுக்கே சலுகைகளையும் அளிக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைப்பு குறித்து விவாதிக்கவில்லை.

18 வயதில் வாக்களிக்கும் உரிமை கொடுத்த பின், திருமணத்திற்கு மட்டுமே 21 வயது வரை ஏன் தடை விதிக்க வேண்டும். உணவு, மருத்துவ வசதிகள் கிடைக்காத சூழலில், பெண்களின் திருமண வயதை மட்டும் 21ஆக உயர்த்துவதன் மூலம் மோசமான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கேடசன், தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையை சர்வதேச விமான நிலையமாக நிலை உயர்த்த வேண்டும் என மத்திய வான்வழி போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கூடுதலான எண்ணிக்கையில் சர்வேதச விமான நிலையங்கள் இருப்பதால் பரிசீலிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 
மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில் 3ஆவது இடத்திலுள்ள தமிழகத்தின் கோரிக்கையை, நிராகரிப்பதும், பாரபட்சம் காட்டுவதும் வழக்கமாகிவிட்டது.

வெள்ள நிவாரண நிதி வழங்கக் கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 69 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத் மீனவர்களுக்காக வீறு கொண்டு எழும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுகிறது.  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரிலுள்ள அரசு சர்க்கரை ஆலையில் புனரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com