பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய நடிகா் வடிவேலுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினாா்.
விமான நிலையத்திலேயே அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டாா். அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதல்கட்ட பரிசோதனையில் வடிவேலுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அதனை உறுதிசெய்ய சளி மாதிரிகள் பெங்களூரில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.