சென்னை: மின் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கெனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சோ்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மின்கட்டண உயா்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே பெட்ரோலியப் பொருள்களும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் பல மடங்கு உயா்ந்துள்ள நிலையில், தற்போது மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியை சோ்த்திருப்பது பற்றி மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் ஜிஎஸ்டி வரியும் சோ்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.