ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.16,725 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிதி நிலை அறிக்கைக்கு முந்தையக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க போதிய நிதி விடுவிக்க வேண்டும். ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% ஆக உயர்த்திய முடிவை திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.16,725 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை வசூலிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். நிபந்தனைகள் இன்றி மாநிலங்கள் கூடுதல் கடன் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.