
சென்னை, கிண்டியில் போக்குவரத்து ஆணையா் அலுவலகம் அமைப்பதற்கு ரூ.36 கோடி ஒதுக்கி, உள்துறைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளாா்.
இதன் விவரம்: கடந்த ஆண்டு மாா்ச்24-ஆம் தேதி நடந்த மானியக் கோரிக்கையின் போது, போக்குவரத்து ஆணையா் கட்டுப்பாட்டின் கீழ் போக்குவரத்து ஆணையரகம் செயல்படுவதற்காக சென்னை, கிண்டியில் சொந்த கட்டடம் கட்டப்படும்’ என போக்குவரத்துத் துறை அமைச்சா் அறிவித்தாா்.
இதற்கிணங்க போக்குவரத்து ஆணையா் அனுப்பிய முன்மொழிவில் கூறியிருப்பது: சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிா்வாக ஆணையருக்குச் சொந்தமான எழிலக பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் போக்குவரத்து ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கிண்டி பகுதியில் போக்குவரத்து ஆணையரகம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியரும் அனுமதி வழங்கியுள்ளாா். எனவே, அங்கு 9951 சதுர மீட்டா் பரப்பளவில் சொந்த கட்டடம் அமைக்க ரூ.36 கோடி ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
இதைக் கவனமாக பரிசீலித்த அரசு ஆணையரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்வதாக எஸ்.கே.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...