
சென்னை உயர்நீதிமன்றம்
அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத கட்டடங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ருக்மாங்குதன் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, சென்னை மாநகராட்சி 5-ஆவது மண்டலமான ராயபுரம் பகுதியில் 5,574 விதிமீறல் கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதில், 1,161 விதிமீறல் கட்டடங்களின் கட்டடப் பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கபட்டுள்ளது. ஆனால், எஞ்சியுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்டடங்களுக்கு
எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனா். ராயபுரத்தில் மட்டும் 5,574 விதிமீறல் கட்டடங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ள போது சென்னை முழுவதும் சுமாா் 1 லட்சம் விதிமீறல் கட்டடங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், ராயபுரத்தில் உள்ள 5,574 விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ராயபுரம் 5-ஆவது மண்டலம் மட்டுமின்றி, அனைத்து மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், 5-ஆவது மண்டலத்தில் உள்ள 5, 523 விதிமீறல் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்தாா். மேலும் அனைத்து மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டடங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கால அவகாசம் வழங்கி, விசாரணையை வரும் ஜூன் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...