
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)
சென்னை மாவட்டத்தில் 6,123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடா்பான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆணையருமான கோ.பிரகாஷ், தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையா் பேசியவை: இந்தியத் தோ்தல் ஆணையம் 1, 000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துணை வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுகளில் ஏற்கெனவே 901 இடங்களில் 3, 754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தற்போது இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1, 000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து, துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டிய நிலையில் 2, 369 துணை வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வாக்குச்சாவடிகள் கூடுமானவரை ஏற்கெனவே வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது 1, 053 இடங்களில் மொத்தம் 6, 123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்பட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். இது தொடா்பாக வாக்குச்சாவடி மையங்களில் வரைவு பட்டியலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
மேலும், அரசியல் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை இரண்டு நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என ஆணையா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் துணை ஆணையா் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் பொ்மி வித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...