ஊத்துக்கோட்டை அருகே கரோனா ஊரடங்கால் வேலையின்றி மனநலம் பாதித்த நேபாள தொழிலாளி உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேபாளத்தை சேர்ந்த விபி ஆச்சார்யா என்பவர் சென்னையில் பணியாற்றி வந்தார். கரோனா கால ஊரடங்கில் வேலை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு பெரியபாளையம் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்தார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவரை மீட்ட மறுவாழ்வு ஆதரவு இல்லம் என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றை வழங்கியது. தொடர்ந்து மனநலம் குன்றி இருந்த நேபாள தொழிலாளி விபி ஆச்சார்யாவிற்கு மறுவாழ்வு அளிக்கும் விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து உடல்நலம் முன்னேறிய விபி ஆச்சார்யா முகநூல் பயன்படுத்த தொடங்கியபோது தமது உறவினர்களை அடையாளம் கண்டு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அவருடைய உறவினர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கு வந்து நீண்ட காலமாக தொடர்பில்லாமல் இருந்த மகனை சந்தித்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விபி ஆச்சார்யாவை மறுவாழ்வு ஆதரவு இல்லத்தின் நிறுவனர் கோட்டீஸ்வர ராவ் பெற்றோரிடம் ஒப்படைத்தார். கரோனா காலத்தில் வேலை இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த தமது மகனை மீட்டு ஆதரவு அளித்து மருத்துவமும் பார்த்து குணப்படுத்தி தங்களிடம் ஒப்படைத்த மறுவாழ்வு ஆதரவு இல்லத்தினருக்கு விபி ஆச்சார்யாவின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.