திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது ஓட்டுக்காக அல்ல: நீதிமன்றம்

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்க கூடாது : உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தானே தவிர, தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்க கூடாது  என  உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை,  கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்து 53 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020-2021ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான ரூ.702 கோடி , ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 
மனுதாரர் தரப்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என  புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிதியின் கீழ் பணிகள் தொடங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது அரசுத்தரப்பில், மாவட்ட ஆட்சியர் தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார், அமைச்சர் அல்ல என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவுக்கு வியாழக்கிழமை (பிப்.18) விளக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டு விசாரணையை  ஒத்திவைத்த நீதிபதிகள், ஊரக வளர்ச்சிக்கான, ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

நிதி ஒதுக்கீடு என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com